புதுவை அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்- வங்கி அதிகாரி பலி
பாகூர்:
திருச்சி மாவட்டம் ஒரலூர் கிராமம் ஞானம்காலனி ராமலிங்கா நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது48). இவர் புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தினமும் வங்கி பணிக்கு காரில் புதுவை வந்து செல்வார்.
அதுபோல் இன்று காலை வங்கி பணிக்காக வீட்டில் இருந்து காரில் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ரெட்டிச்சாவடி அருகே காட்டுக்குப்பம் என்ற இடத்தில் வந்த போது புதுவையில் இருந்து கடலூருக்கு கம்பி ஏற்றி வந்த லாரியும், புகழேந்தி ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி புகழேந்தி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.