செய்திகள்

வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2018-11-02 09:55 GMT   |   Update On 2018-11-02 09:55 GMT
வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூர்:

வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டி தெருவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

அப்பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மையத்தின் முன்பக்க கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டும் உள்ளே இருந்த கேமரா திருப்பி வைக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், 4 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து கேமராவை உடைப்பது தெரிந்தது. அவர்கள் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால் பணம் இருந்த பகுதியை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News