ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் திருமலை (வயது 24), ரகுமான் (25). நண்பர்களான இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
தினமும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு அவர்கள் வேலைக்காக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
நாவலூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வந்த போது, பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த திருமலை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ரகுமான் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
அவரை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விபத்து நடந்த இடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.