செய்திகள்

வாலாஜா அருகே பணத் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

Published On 2018-10-31 11:24 GMT   |   Update On 2018-10-31 11:24 GMT
வாலாஜா அருகே பணத் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்டார்.

வாலாஜா:

வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது நண்பர் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு சரவணன் (30).

இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தலங்கை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினர். அப்போது சுமைதாங்கி சரவணன் ரூ.5 ஆயிரம் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தை காணவில்லை என்று கூறி ஒழுகூர்சரவணன் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் உன் பணத்தை எடுக்க வில்லை நீ தான் மது போதையில் வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து விட்டாய் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை அடையாளம் காட்டு என்று கூறி பைக்கில் இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஒழுகூர் சரவணன் பைக்கை நிறுத்தும்படி கூறி பைக்கில் இருந்து இறங்கி ஓடினார்.

இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை பிடித்து எதற்காக ஓடுகிறாய் அப்படியென்றால் நீ தான் பணத்தை எடுத்தாயா என்று கேட்டு அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த ஒழுகூர் சரவணன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுமைதாங்கி சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த ஒழுகூர் சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஒழுகூர் சரவணன் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News