செய்திகள்

அத்தாணியில் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை - அதிர்ச்சியில் மனைவியும் பலி

Published On 2018-10-31 06:16 GMT   |   Update On 2018-10-31 06:16 GMT
அத்தாணியில் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி தாங்காமல் மனைவியும் மரணம் அடைந்தார்.

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55).

கடந்த திங்கட்கிழமை மாலை வெங்கடாசலம் வி‌ஷம் குடித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

வெங்கடாசலம் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் அவரது மனைவி சித்ரா (45) சோகத்தில் இருந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த அதிர்ச்சி தாங்காமல் சித்ரா உடல் நலம் குன்றியது. இதில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

வெங்கடாசலம்-சித்ரா தம்பதிக்கு லோகேஷ், சூரியன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லோகேஷ் 9-ம் வகுப்பும், சூரியன் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இவர்கள் 2 பேரும் ஒரே நேரத்தில் தந்தையையும், தாயையும் இழந்து அனாதையாக தவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News