செய்திகள்

தஞ்சை அருகே விபத்து- போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி வாகனம் மோதி பலி

Published On 2018-10-30 11:38 GMT   |   Update On 2018-10-30 11:38 GMT
தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள விளார் ரோடு, காயித்தே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (வயது 38). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பணியை முடித்து விட்டு மாலை 6.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கீதா ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.

இவர் தஞ்சை மாதாக்கோட்டை அருகே உள்ள பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கீதா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்ட கீதா பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மனைவி விபத்தில் பலியான தகவல் கிடைத்ததும் ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் டி.எஸ்.பிகள் ரவிச்சந்திரன், ஜெயசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பிரபாகரனுக்கு ஆறுதல் கூறினர்.
Tags:    

Similar News