செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயிக்கு கத்திக்குத்து - முதியவர் கைது

Published On 2018-10-29 12:21 GMT   |   Update On 2018-10-29 12:21 GMT
பண்ருட்டி அருகே விவசாயியை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வீரசிங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45), விவசாயி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்கரவர்த்தி, அவரது மகன் பாலமுருகன் மற்றும் உறவினர்கள் ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேரும் நேற்று வேல்முருகன் வீட்டுக்கு சென்றனர்.

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். புகாரின் பேரில் சக்கரவர்த்தி, பால முருகன், ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News