பண்ருட்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்னுபிரியா, ஜவ்வாதுஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிரசோதனை நடத்தினர்.
அப்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் மளிகைகடை நடத்திவரும் குமார் (வயது 42) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.