செய்திகள்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 3 வாலிபர்கள் பலி

Published On 2018-10-29 06:42 GMT   |   Update On 2018-10-29 06:42 GMT
திருத்தணி அருகே விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டை அடுத்த பாண்டறவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 32). நேற்று இரவு அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு அதே பகுதியை சேர்ந்த நண்பர் அரிகிருஷ்ணனுடன் (30) ஒரே மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

திருத்தணி அருகே முருகம்பட்டு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் (18), கதிரேசன் (24) ஆகியோர் மீது பாஸ்கரன்-அரிகிருஷ்ணன் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த பாஸ்கரன், அஜித், கதிரேசன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அரிகிரு‌ஷணன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News