செய்திகள்

செய்யாறு அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.1.90 லட்சம் கொள்ளை

Published On 2018-10-29 05:29 GMT   |   Update On 2018-10-29 05:29 GMT
செய்யாறு அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியை அறையில் பூட்டி ரூ.1.90 லட்சத்தை 4 பேர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் உள்ள பாராசூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரவு காவலாளியாக பாராசூர் எறையூர் காலனியை சேர்ந்த வஜ்ரவேல் (52) என்பவர் உள்ளார்.

வஜ்ரவேல் வழக்கம் போல் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கல்லூரிக்குள் புகுந்தனர். காவலாளி வஜ்ரவேலுவை தாக்கி ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.

பின்னர், அலுவலகத்தின் அறை கதவை உடைத்தனர். உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து, அந்த கும்பல் கல்லூரியில் இருந்து தப்பிச் சென்றது.

ஒரு வழியாக அறையின் கதவை திறந்து வெளியே வந்த காவலாளி வஜ்ரவேல், கல்லூரி செயலர் நடராஜன் மற்றும் முதல்வர் சதாசிவம் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அவர்கள் கல்லூரிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து, செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரவு காவலாளியிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், பணத்தை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை பிடிக்கவும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News