பட்டீஸ்வரம் அருகே ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆவூர் ஆலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா (வயது 31). இவர் நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு கவிதா தனது தாய் பார்வதியுடன் கும்பகோணம் சென்றார். அங்கு கடைவீதியில் பொருட்கள் வாங்கி கொண்டு மொபட்டியில் தாயுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது பட்டீஸ்வரம் அருகே தேனாம்படுகை என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கவிதாவை வழிமறித்தனர். பின்னர் திடீரென அவர்கள் 2 பேரும், கவிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி கவிதா, பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியையிடம் 2 வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.