செய்திகள்

தேனி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளிப்பு

Published On 2018-10-19 11:45 GMT   |   Update On 2018-10-19 11:45 GMT
தேனி அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகே கோட்டூர் என்.சி. காலனியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (20). வீரபாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு வரதட்சணை கேட்டு முகேசின் தாய், தந்தை கிருஷ்ண வேணியை கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

தாய் வீட்டில் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் பணம் வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து முகேசிடம் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். முகேசும் பணம் வாங்கி வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என கூறியுள்ளார்.

காதல் கணவரும் தன்னிடம் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த கிருஷ்ணவேணி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைத்து கிருஷ்ணவேணியை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வீரபாண்டி போலீசார் முகேஷ் மற்றும் அவரது தாய், தந்தை மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News