செய்திகள்

வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பெண்களிடம் ரூ.3 லட்சம் மோசடி- தாய், மகன் கைது

Published On 2018-10-15 12:17 GMT   |   Update On 2018-10-15 12:17 GMT
மதுரையில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பெண்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
மதுரை:

மதுரை கரிமேடு பாரதியார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி காந்தி மீனாட்சி (வயது24). இவரும், ஆரப்பாளையம் கருப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி அனுசுயாவும் தோழிகள்.

இந்த நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாக காந்திமீனாட்சி தெரிவித்தார். அப்போது பொன்னகரத்தைச் சேர்ந்த கணேசன் (25) என்பவர் சொசைட்டி மூலம் கடன் பெற்று தருவார். ரூ.20 ஆயிரம் கொடுத்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் என அனுசுயா தெரிவித்துள்ளார்.

அதன்படி காந்திமீனாட்சி ரூ.15 ஆயிரம் கொடுத்தார். மேலும் அவருக்கு தெரிந்த பெண்கள் 15 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கணேசன் கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை.

இதுகுறித்து போலீசில் காந்திமீனாட்சி புகார் செய்தார். அதில் கணேசன் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தி கணேசன், அவரது தாயார் கண்ணம்மாள் (49) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தமைறைவான சக்திவேல், அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தேடி வருகின்றனர்.

சர்வேயர் காலனி ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (23) மாடு வாங்க திட்டமிட்டார். இதற்காக தனது 33 பவுன் நகையை உலகனேரியை சேர்ந்த சரவணன் (36) என்பவரிடம் கொடுத்து அதனை பணமாக்கி மாடு வாங்கி தரும்படி கூறினாராம்.

நகையை பெற்றுக் கொண்ட சரவணன் திடீரென மாயமாகி விட்டார். அவரை தேடி கண்டுபிடித்து நகையை கேட்டபோது அவதூறாக பேசியதாக போலீசில் அன்புச்செல்வன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (34). இவர் தனக்கு சொந்தமான 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரத்தை வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி உள்ளார்.

சிறிது காலம் கழித்து நகை-பணத்தை திருப்பிக் கேட்டபோது மணிகண்டன் இழுத்தடித்துள்ளார். இது குறித்து தெற்குவாசல் போலீசில் ராமமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News