செய்திகள்

பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-10-10 17:34 GMT   |   Update On 2018-10-10 17:34 GMT
பீல்வாடி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்து பீல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அருமடல் ரோட்டில் அய்யனார் கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 160 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கு சமையல் அறையும் கிடையாது. சமையலரும் இல்லை.

இதனால் இப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அரை கிலோ மீட்டர் தூரம் சென்று மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தினமும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதற்காக சாலை யில் தட்டை கையில் ஏந்திக்கொண்டு தொடக்கப்பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் பள்ளியில் சாப்பிட்டு விட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.

மாணவ-மாணவிகள் தினமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மழை பெய்யும் போது மாணவ- மாணவிகள் தொடக்கப்பள்ளிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு வருவதால் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் உணவு இடைவேளையில், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதும், படிப்பது, எழுதுவது என்று தங்களது பணிகளை செய்வார்கள். ஆனால் இதை மாணவர்கள் செய்வதற்கு கூட நேரம் இல்லை. மேலும் மாணவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிட்டு வரும் போது விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே சமையல் கூடம் விரைந்து அமைத்து, சமையலரை நியமித்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மாணவர் களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News