செய்திகள்

காரைக்குடியில் இருதய பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

Published On 2018-10-09 17:20 GMT   |   Update On 2018-10-09 17:20 GMT
காரைக்குடியில் இருதய பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
காரைக்குடி:

காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 16 வயது முதல் 25 வயது வரையும், 26 முதல் 50 வயது வரையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் 16 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஆண்களுக்கான 16-25 வயது மற்றும் 26-50 வயது பிரிவுகளுக்கான போட்டியை காரைக்குடி சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆண்களுக்கான 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவு போட்டியை இலுப்பக்குடி துணை ராணுவ பட்டாலியன் சீனியர் கமாண்டர் அஜய் ஜோஷியும், பெண்களுக்கான பிரிவு மாரத்தான் போட்டியை சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் வனிதாவும் தொடங்கி வைத்தனர். 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு ஓடினார்.

இருதய பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் ஆண்களுக்கான 16-25 வயது பிரிவில் லிங்கேசுவரன் முதலிடத்தையும், வெங்கடேஷ் 2-ம் இடத்தையும், கஜேந்திரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். 26-50 வயது பிரிவில் மணிகண்டன், குல்தீப்குமார், பட்டாணி ஆகியோர் முதல் 3 இடங்களையும், 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முத்துவிநாயகம், வள்ளியப்பன், அஜய் ஜோஷி ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் ஏன்சலின்ஸ், நீது, லட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் சலீம், டாக்டர் காமாட்சி சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News