செய்திகள்

திருப்பூரில் வங்காள தேச வாலிபர்கள் 3 பேர் கைது - போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-10-06 11:41 GMT   |   Update On 2018-10-06 11:41 GMT
திருப்பூரில் தங்கி இருந்த வங்காள தேச வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்:

தொழில் நகரமான திருப்பூரில் வெளி நாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி இருந்து பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் வெளி நாடு மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் முகவரி, போட்டோ, ஆதார் அட்டை உள்ளிட்டைவகளை சமர்பிக்க வேண்டும் என திருப்பூர் போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் செவந்தான் பாளையத்தில் வங்காள தேசத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அனுமதியின்றி தங்கி இருப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் நல்லூர் போலீசாரிடம் இதனை கண்காணிக்கும் படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் செவந்தான் பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசார் இன்று காலை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வங்காள தேசத்தை சேர்ந்த இப்ராகிம் (25), சுபியன் (30), பர்காத் (27) ஆகிய 3 வாலிபர்கள் அனுமதியின்றி தங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது மேற்கு வங்க முகவரி இருந்தது. அவர்கள் போலி பாஸ்போர்ட்டு மூலம் இந்தியா வந்தது தெரிய வந்தது. அவர்கள் எப்படி இங்கு வந்தனர்? அவர்களுக்கு மேற்கு வங்க முகவரி கிடைத்தது எப்படி ? நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News