செய்திகள்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது நாளாக மழை - நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

Published On 2018-10-05 15:49 IST   |   Update On 2018-10-05 15:49:00 IST
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் 3 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக் கெடுத்தது. அதிகபட்சமாக வேலூர், ஆம்பூரில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலை சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

வேலூர் கோட்டை சுற்றுச்சாலை புதிய பஸ்நிலையம் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீரை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அரக்கோணம், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் பகுதிகளில் பலத்த மழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்தது.

ஏலகிரி மலையில் பலத்த மழையால் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. மதிய நேரங்களில் இதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

வேலூர்-32.3, ஆம்பூர்-32, வாணியம்பாடி-27, ஆலங்காயம்-23.6, அரக்கோணம்-28.2, காவேரிப்பாக்கம்-23, வாலாஜா-18, சோளிங்கர்-22.2, திருப்பத்தூர்-20.2, ஆற்காடு-31, குடியாத்தம்-22, மேல்ஆலத்தூர்-40.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம், இரவு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து கொட்டியது. நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.செங்கம், சாத்தனூர்அணை, கலசப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் மழைவெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது. அதிகபட்சமாக செங்கத்தில் 64.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவண்ணாமலை-52.8, ஆரணி-49.6, செய்யாறு-32.5, செங்கம்-64.2, சாத்தனூர் அணை-60, வந்தவாசி-40.2, போளூர்-34.4, தண்டராம்பட்டு-40.8, கலசப்பாக்கம்-58.2.

Tags:    

Similar News