செய்திகள்

தொண்டி பகுதியில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2018-10-03 12:35 GMT   |   Update On 2018-10-03 12:35 GMT
தொண்டி பகுதியில் டீசல் விலை உயர்வைக்கண்டித்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselPriceHike
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிங்கார வேலர்நகர், லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்குச் சென்றுவிட்டு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் கரை திரும்புவர்.

கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன் பிடிக்கச் சென்று தொழிலில் எதிர்பார்த்தஅளவிற்கு மீன்வரத்து இல்லாத நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக விசைப்படகு மீனவர்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை கடலுக்குச் செல்ல 250 முதல் 300 லிட்டர் வரை டீசல் பிடித்துச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் டீசலுக்கான மானியத்தையும் உயர்ந்ததால் கஷ்டப்பட்டு அதிக விலைக்கு டீசலை பிடித்து கடலுக்குச் சென்றால் எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைக்காததாலும், அப்படிகிடைத்தாலும் கரைதிரும்பினால் மீனவர்கள் உரிய விலைகிடைக்காததாலும் மீனவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.அதனால் தொண்டி பகுதி விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கான மானிய விலையை உயர்த்தி தரக்கேட்டும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselPriceHike
Tags:    

Similar News