செய்திகள்

தூசி அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலி

Published On 2018-10-01 10:35 GMT   |   Update On 2018-10-01 10:35 GMT
தூசி அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம:

செய்யாறு அடுத்த தூசி மாமண்டூரை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 65). இவருக்கு பத்மினி என்ற மனைவியும் 3 மகன்கள் 2 மகள் உள்ளனர். தீராத வயிற்று வலியால் கண்ணபிரான் அவதி அடைந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்ற கண்ணபிரானுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கண்ணபிரான் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் அவரை தேடி அவரது மகன் வெங்கடேசன் விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு கண்ணபிரான் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அப்போது அவர் பூச்சு மருந்து குடித்து விட்டதாக மகனிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் இறந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News