திண்டுக்கல் பகுதியில் மது விற்ற கும்பல் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடை மூலம் குடிமகன்கள் மது வாங்கி வந்தனர். ஆனால் சில பார்களில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் சிக்கன் மற்றும் பெட்டிக்கடைகளிலும் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திண்டுக்கல் புறநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சாணார்பட்டி, கோபால் பட்டி, சிறுகுடி, அம்பாத்துரை, செட்டியபட்டி, மொட்டனம் பட்டி, நத்தம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் கள்ள சந்தையில் மது விற்ற கந்தசாமி, ரவி, செல்வம், மணிமாறன், அய்யனார் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் திண்டுக்கல் நகர் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் சேக் தாவூது தலைமையில் மின் மயானம், மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், வடக்குரத வீதி, பழனிசாலை, குள்ளனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மது பதுக்கி விற்ற 9 பேரை கைது செய்தனர். மேலும் 150 மது பாட்டில்கள் மற்றும் ரூ.8500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடரும். அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #arrest