செய்திகள்

மாநில கல்லூரி மாணவருக்கு வெட்டு- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Published On 2018-09-27 09:14 GMT   |   Update On 2018-09-27 09:14 GMT
ஆவடி பஸ் நிலையம் அருகே மாநில கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநின்றவூர்:

ஆவடி, கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). மாநில கல்லூரியில் விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை அவர் ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் முகேசை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் முகேசின் கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘ரூட்டுதல’ பிரச்சனையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் முகேஷ் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பச்சையப்பன் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் யோகேஷ்வரன், மணிகண்டன், விஷால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவர் முகேசை ஓட ஓட விரட்டி வெடும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப்களில் பரவி வருகிறது.
Tags:    

Similar News