செய்திகள்

பண்ருட்டி அருகே அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-09-25 15:53 IST   |   Update On 2018-09-25 15:53:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அய்யனார் கோவில் உண்டியை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தில் பழமை வாய்ந்த வீரகம்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கோவிலின் உள்ளே உண்டியல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

கோவிலின் பூசாரி நேற்று இரவு பூஜை முடிந்ததும் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டு சென்று விட்டனர்.

இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்டியலில் ரூ.1 லட்சம் வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News