செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

கும்பகோணத்தில் பூட்டி கிடந்த ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை

Published On 2018-09-25 08:49 GMT   |   Update On 2018-09-25 08:49 GMT
கும்பகோணத்தில் பூட்டி கிடந்த ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்னை பைபாஸ் சாலை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 48). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி புதுக்கோட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் காரில் சேதுராமன் சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் கும்பகோணம் திரும்பினார்.

அப்போது வீட்டுக்கு வந்த சேதுராமன், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை மற்றும் எல்இடி டி.வி, லேப்டாப் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல், பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி ஆசிரியர் சேதுராமன், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News