செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு தூத்துக்குடி வந்தது

Published On 2018-09-22 11:25 GMT   |   Update On 2018-09-22 11:25 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று மாலை வருகை தந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். #ThoothukudiSterlite
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.



இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30 மணிக்கு இந்தக் குழு மக்களிடம் கருத்து கேட்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் தாமிர தாதுக்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite
Tags:    

Similar News