செய்திகள் (Tamil News)

வீட்டுக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்த தந்தையை அரிவாளால் வெட்டிய தொழிலாளி

Published On 2018-09-21 16:55 GMT   |   Update On 2018-09-21 16:55 GMT
குன்னத்தூர் அருகே வீட்டுக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்த தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள சுக்காகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பிரகாஷ் (28) என்ற மகன் உள்ளார்.

கைத்தறி தொழிலாளியான பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு காலதாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனை பழனிசாமி கண்டித்தார். இதனால் தந்தை- மகன் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மீண்டும் மறுநாள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பழனிசாமியின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டி விட்டு தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News