செய்திகள்

சுயேச்சை வெற்றிபெற்றால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

Published On 2018-09-21 13:51 GMT   |   Update On 2018-09-21 13:51 GMT
சிலர் வாய் சவடால் மட்டும் பேசுவார்கள், சுயேச்சை வெற்றிபெற்றால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக் குட்பட்ட தனக்கன்குளம், நிலையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் அம்மா திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற நல உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

கலெக்டர் நட ராஜன் தலைமை தாங் கினார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள், அதிகாரிகளை தேடி சென்ற நிலை மாறி, அதிகாரிகளே மக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்கள்.

இது அம்மா ஏற்படுத்தி தந்த அரசு. அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரது வழிகாட்டுதலோடு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்குமே அ.தி.மு.க.வின் கோட்டையாகும். 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீனிவேல், 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மீண்டும் ஒரு இடைத் தேர்தலை சந்திக்க இருக் கிறோம். இதில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறுவதற்கு உறுதியாகி விட்டது. ஏனென்றால், கடந்த இடைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவதுதான் அ.தி.மு.க. அரசின் முக்கிய நோக்கம். அம்மாவின் பிள்ளைகளாகிய எங்களால்தான் அது முடியும்.

சிலர் வருவார்கள், வாய் சவடால் பேசுவார்கள், சுயேச்சையால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார்கள். இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழக மக்களுக்கு சேவை செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுகின்ற வகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல், தமிழரசன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, முத்து இருளாண்டி, திருநகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News