செய்திகள்
கோவிலில் திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி விஸ்வநாதன்-பவித்ரா

காதலியின் பெற்றோர் எதிர்ப்பால் கோவிலில் திருமணம் செய்த ஜோடி

Published On 2018-09-17 12:36 GMT   |   Update On 2018-09-17 12:36 GMT
அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் பெண் கொடுப்பாதாக காதலியின் பெற்றோர் கூறியதால் கோவிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி போலீசில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 26). ஐ.டி.ஐ. படிப்பு முடித்து விட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

ஈங்கூர் அருகே புலவனூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் பவித்ரா (23). ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார்.

பவித்ராவும், விஸ்வநாதனும் தூரத்து உறவினர்கள் ஆவர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோரை சந்தித்து விஸ்வநாதன் பெண் கேட்டார்.

அப்போது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுப்பேன் என கூறி பவித்ராவின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை விஸ்வநாதனும், பவித்ராவும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிறகு பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்களை விஸ்வநாதனின் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News