செய்திகள்

பரமக்குடியில் முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது- சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் சிக்கினார்

Published On 2018-09-15 06:49 GMT   |   Update On 2018-09-15 06:49 GMT
பரமக்குடியில் முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி:

பரமக்குடி மேலசத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஏகாம்பரம் என்ற முதியவர் சுற்றித்திரிந்தார். இரவில் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

நள்ளிரவில் அங்கு வரும் யாரோ சிலர் அவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து ஏகாம்பரம் அந்தப்பகுதி மக்களிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஏகாம்பரம் வழக்கமாக படுக்கும் வீட்டின் முன்பு சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டது.

வழக்கம் போல் ஏகாம்பரத்திடம் பணம் பறிக்கும் வாலிபர் நேற்று இரவு அங்கு வந்தார். மதில் ஏறி குதித்த அவர் ஏகாம்பரத்தின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றார்.

அப்போது அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அங்கு கிடந்த கல்லை எடுத்து முதியவரை தாக்கினார்.

பின்னர் அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் பரமக்குடியைச் சேர்ந்த கணேச பாண்டியன் (வயது 17) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
Tags:    

Similar News