செய்திகள்

ரூ.1¼ லட்சம் பறிமுதல்- டாஸ்மாக் மேலாளர் மீது வழக்குப்பதிவு

Published On 2018-09-14 14:13 GMT   |   Update On 2018-09-14 14:13 GMT
வேலூரில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் தனது கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் மதுபானங்கள் விற்பனையானால் ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.4 லட்சத்துக்கு மேல் விற்பனையானால் ரூ.5 ஆயிரம் வீதமும் வசூலில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் கடந்த (ஆகஸ்டு) மாதம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வர வேண்டிய பணத்தை மேற்பார்வையாளர்களிடம் இருந்து தனித்தனியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வேலூர் லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் மாலை 6 மணி அளவில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய சோதனை நடைபெற்றது. அப்போது சோபியா ஜோதிபாயின் கைப்பையில் இருந்து ரூ.80 ஆயிரமும், அவருடைய காரில் இருந்து ரூ.25 ஆயிரமும், மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். கணக்கில் வராத பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News