பழமொழியை மாற்றி கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கையில் கட்டுப் போட்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
அவரை வாழ்த்தி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... எழுந்தாலும் ஆயிரம் பொன்... என்பார்கள். அதுபோல உடல் நலக்குறைவால் மறைந்திருந்தாலும் புறநானூற்று வீரர் போல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உற்சாகமாக எழுந்து வந்து விட்டார் என்றார்.
“மறைந்திருந்தாலும்” என்ற வார்த்தையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.... இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் என்பதுதான் பழமொழி. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்” என்று பழமொழியை மாற்றி பேசியதாலும் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றிக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்க முடியாது.
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி திருட்டுத்தனமாக வெற்றி பெற்றதுபோல திருப்பரங்குன்றத்தில் தினகரனால் வெற்றி பெற முடியாது. அதுமட்டுமல்ல சுண்டக்காய் கட்சிகளும் காணாமல்போய் விடும் என்று பேசினார். #DindigulSrinivasan #ADMK