செய்திகள்

செல்போனை தொலைத்ததற்கு தாய் திட்டியதால் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-09-09 23:14 GMT   |   Update On 2018-09-09 23:14 GMT
செல்போனை தொலைத்ததற்கு தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் நமச்சிவாயமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 3-வது மகள் கோகிலா (வயது 18). இவர் கோவையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கோவையில் இருந்து கோகிலா சம்பவத்தன்று நசியனூருக்கு பஸ்சில் வந்துகொண்டு இருந்தார். அப்போது அவர் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டதாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு சென்றதும் இதுகுறித்து அவர் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். அப்போது கோகிலாவை அவருடைய தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கச்சென்றுவிட்டனர். தாய் திட்டியதால் மனமுடைந்த கோகிலா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் கோகிலா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதுபற்றி உடனே சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News