செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - வைத்திலிங்கம் எம்.பி.

Published On 2018-09-07 10:34 GMT   |   Update On 2018-09-07 10:34 GMT
18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியில் கூறியுள்ளார். #MLAsDisqualified #Vaithilingam

தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:-ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா?

பதில்:- ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்.

கேள்வி:-குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தது குறித்து?

பதில்:- அமைச்சர் விஜயபாஸ்கர் ‘மடியில் கனம் இல்லை. இதனால் எனக்கு பயம் இல்லை’ என்று அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடைபெறும் போது அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. விசாரணை முடிவில் தான் அதற்கான நடவடிக்கை குறித்து தெரியும்.

கேள்வி:- காவிரியில் தண்ணீர் வந்தும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வர வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்களே?

பதில்:- காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் சில நாட்களில் சென்று விடும். அதன்பின்னர் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூர்வாரும் பணியை பொறுத்தவரை மிக அற்புதமாக நடந்து வருகிறது.

கேள்வி:- 18 எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதே?

பதில்:- இந்த வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News