செய்திகள்

திருப்பதி அருகே செம்மரம் கடத்திய போளூர் வாலிபர் கைது

Published On 2018-09-06 10:38 GMT   |   Update On 2018-09-06 10:38 GMT
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக போளூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அலிபிரி பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்கு பூங்கா பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.

போலீசாரை கண்ட மர்ம நபர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். காரில் இருந்த மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். காரை பறிமுதல் செய்த போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூகா மங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.

மேலும் அந்த நபர் சபரி மலை செல்ல மாலை அணிந்து இருந்தார். போலீசார் காரை சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆந்திர மாநில பதிவெண் போர்டுகளும் இருந்தது. செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News