செய்திகள்

காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற வடமாநில வாலிபருக்கு அடி,உதை

Published On 2018-09-05 11:21 GMT   |   Update On 2018-09-05 11:21 GMT
காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

காட்பாடி தாராபடவேட்டில் மளிகைக்கடை ஒன்று உள்ளது. அங்கு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் அங்கு பொருட்கள் வாங்குவது போல நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருட முயன்றார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் கைகளை கட்டிப்போட்டு காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அந்த வாலிபரிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் ஒரு வகையான போதைபொருளை உட்கொண்டிருந்ததால் மயக்க நிலையில் இருந்தார். அதனால் போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாகனம் மற்றும் நகைகளை திருடும் கும்பலை சேர்ந்தவரா?, அல்லது மோட்டார்சைக்கிள்கள் திருடும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்தும், அவர் பழைய குற்றவாளியா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News