செய்திகள்

அதிமுக எம்எல்ஏக்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது- ஓ. பன்னீர்செல்வம்

Published On 2018-09-04 06:46 GMT   |   Update On 2018-09-04 06:46 GMT
அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #ADMK #OPanneerselvam
காஞ்சீபுரம்:

வேலூரில் நேற்று இரவு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பு அணை 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அணையையும், தமிழக அரசினையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறு.

உடைந்த முக்கொம்பு அணை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விரைந்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து உறுதியாக உள்ளது போல் அ.தி.மு.க. அரசும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும்.

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரினை தேக்கி வைப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.



அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவே முடியும்.

எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டப்பட்ட மாளிகை அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் எவராலும் தகர்க்க முடியாத மாளிகையாகும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ் கலந்து கொண்டனர். #ADMK #OPanneerselvam
Tags:    

Similar News