செய்திகள்
கனகசெட்டிகுளத்தில் சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி பலி
கனகசெட்டிகுளத்தில் சாலையை கடக்க முயன்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டை அடுத்த கனக செட்டிகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 50வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அந்த நபர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விபத்தில் பலியானவர் யார்- எந்த ஊர் என்பது குறித்தும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.