அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளான வடமதுரை, மோர்பட்டி, தங்கமாபட்டி மற்றும் மலை கிராமங்களில் இருந்தும் விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.
திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து தக்காளிகளை கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய அளவு மழை பொழிவு இல்லை. இந்த ஆண்டும் பிற பகுதிகளில் மழை பெய்தபோதும் அய்யலூர், வடமதுரை பகுதியில் மழை ஏமாற்றி சென்றது.
இதனால் தக்காளி சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே சந்தைக்கும் குறைந்த அளவு தக்காளிகளே வந்திருந்தன. மேலும் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பறிப்பு கூலிக்குகூட விலை கட்டுபடியாகவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு உள்ளனர். மேலும் கால் நடைகளுக்கு தீவணமாகவும் பயன்படுத்துகின்றனர்.