கஞ்சா கடத்திய போது மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி வாலிபர் பலி
தாம்பரம்:
சென்னை குரோம் பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (18). அதே பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரகாஷ் (18).
இவர்கள் இருவரும் ¼ கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி. பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற விஜய்பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் உடல் சிதறி விஜய்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவத்தில் மதிவண்ணன் படுகாயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மதிவண்ணனிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.