செய்திகள்

கடலூரில் உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை - 108 வியாபாரிகள் மீது வழக்கு

Published On 2018-08-30 18:05 GMT   |   Update On 2018-08-30 18:05 GMT
கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 கடலூர்:

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிய கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இது வரை உரிமம் பெறாத வியாபாரிகள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், காய்கறிக்கடைக்காரர்களும் உரிமம் பெற வேண்டும்.

உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலோ, தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டாலோ அது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம்.

இப்போது நகர்புறங்களில் இட்லி, தோசை மாவுகளை அரைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவை பிரிட்ஜில் வைத்து தான் விற்க வேண்டுமே தவிர வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

கரும்பு சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களில் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சுத்தமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களில் அதனை பயன்படுத்தக்கூடாது என்பதால் மீன்களை பதப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர்கள் அவற்றில் நீலநிறத்தை சேர்க்க வேண்டும் என்று ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

சமையல் எண்ணை, பால், தண்ணீர், டீ போன்றவற்றில் கலப்படத்தை தடுப்பதற்காக அவற்றில் இருந்து மாதந்தோறும் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணையில் மட்டும் 68 மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் ஒரு எண்ணை மாதிரியில் கலப்படம் இருப்பதும், 17 மாதிரிகள் தரம் குறைந்ததாக இருப்பதும், 27 மாதிரிகளில் லேபல் மோசடி இருப்பதும் தெரியவந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News