செய்திகள்

ராஜபாளையத்தில் ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தி போலீசார்-மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

Published On 2018-08-30 17:25 GMT   |   Update On 2018-08-30 17:25 GMT
தலைக்கவசம் அணிய வலியுறுத்தி ராஜபாளையத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில், காவலர்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராஜபாளையம்:

வாகனப் பெருக்கத்தின் காரணமாக, சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்தில், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக் கவசம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ராஜபாளையம் போக்குவரத்து காவல் துறை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், டி.எஸ்.பி ரவிச்சந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போக்குவரத்து காவலர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 350-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் தென்காசி சாலையில் இருந்து சொக்கர் கோவில், காந்தி கலை மன்றம், எல்.ஐ.சி அலுவலகம், தெற்கு காவல் நிலையம், காந்தி சிலை, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் நேரு சிலை, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலை போன்ற பிரதான சாலைகள் வழியாக வந்து மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிறைவடைந்தது.
Tags:    

Similar News