செய்திகள்

தஞ்சையில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலி

Published On 2018-08-30 11:06 GMT   |   Update On 2018-08-30 11:06 GMT
தஞ்சையில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவரது மகன் கிஷோர் பிரசாத் (வயது 18). டிப்ளமோ படித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு கிஷோர் பிரசாத் தனது நண்பர்களுடன் புதுப்பட்டினம் நெய்வாய்க்காலில் உள்ள ஆற்றின் கரையோரம் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென கிஷோர் பிரசாத் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைதொடர்ந்து அருகே படித்துறையில் குளித்து கொண்டிருந்தவர்களிடம் நடந்ததை கூறி அவர்களை கூப்பிட்டு வந்தனர். ஆனால் அதற்குள் கிஷோர் பிரசாத்தை தண்ணீர் இழுத்து சென்று விட்டது. அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தஞ்சை தாலுகா போலீசார் சுமார் 1 மணி நேரம் கிஷோர் பிரசாத்தை தேடினர்.

இந்நிலையில் கீழவஸ்தா சாவடியில் கிஷோர் பிரசாத் உடல் மிதந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News