செய்திகள்

தமிழக அரசு, முதல்வர் குறித்து அவதூறு பேச்சு- முக ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Published On 2018-08-30 07:33 GMT   |   Update On 2018-08-30 07:33 GMT
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு, முதல்வர் குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் செப்.24ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #MKStalin
திருச்சி:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 21.6.2018 அன்று தி.மு.க. சார்பில் மாநில அளவிலான சிறுபான்மைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அப்போதைய தி.மு.க. செயல் தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு பற்றியும், முதல்-அமைச்சர் குறித்தும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருச்சி அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் கடந்த 11.7.2018 அன்று தமிழக அரசு குறித்தும், முதல்-அமைச்சர் பற்றியும் அவதூறான தகவல்களை கூறிய மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் நடந்து வந்தது. இன்று மு.க.ஸ்டாலின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந் தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து தி.மு.க. வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர் ஆகியோர் ஆஜராகி கோர்ட்டில் மனு ஒன்றை அளித்தனர். அதில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இன்றைய விசாரணைக்கு மு.க.ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சம்பத் குமார் ஆஜரானார். #DMK #MKStalin
Tags:    

Similar News