search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy court"

    • ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
    • நிபந்தனைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

    திருச்சி:

    திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு திரும்பியபோது தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவுக்கு, கடந்த, 15-ந்தேதி திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர்.

    இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும், சிவாவின் ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்குள் புகுந்து, திருச்சி எம்.பி. சிவா ஆதரவாளர்களை தாக்கினர்.

    அதன்பேரில் தி.மு.க. நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், துரைராஜ், ராமதாஸ், திருப்பதி ஆகியோர் மீது, 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் வரும், 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஜாமீன் மனுக்களை விசாரித்த, 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்று (27-ந்தேதி, திங்கட்கிழமைக்கு) ஒத்தி வைத்தார்.

    இன்று ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகவில்லை.

    அதையடுத்து, அவர்கள் நாளை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளளனர். கடந்த, 20-ந்தேதி மற்றும் 23-ந்தேதி என இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்-2 நீதிபதி பாலாஜி ஏற்கனவே தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.
    • நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சீமான் உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.

    பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு தொடர் வண்டிகளில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை 100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

    சலுகை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்கக்கூடாது. உயர்ந்த இடத்தில் உள்ள நீதிபதிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடக்கூடாது. அது சிக்கலை ஏற்படுத்தும். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு முன்பாக முதலமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான முதலமைச்சரின் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி ஷெரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யு.கே.ஜி. படித்து வந்தாள். அவளது வீட்டின் அருகே திருச்சி கூனிபஜார் கோரி மேடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற முகமது இஸ்லாம் (43) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பக்கத்து வீடு என்பதால் ஷெரீனாவிடம் அப்பாஸ் நன்றாக பழகி வந்துள்ளார். கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார்.

    அப்பாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் உள்ள நிலையில், பெண் குழந்தை இல்லாததால் ஷெரீனாவிடம் மிகவும் பாசமுடன் பழகியுள்ளார். இதனால் அவளது பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 26.11.2017 அன்று ஷெரீ னாவை தனியாக அழைத்து சென்ற அப்பாஸ், அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த ஷெரீனாவிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறவே அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அப்பாசிடம் சென்று தட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ஷெரீனாவை துண்டு துண்டாக வெட்டி கொன்று ஆற்றில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 20.2.2018 அன்று திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷெரீனாவின் தந்தை புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி மகிளினி முன்னிலையில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி இன்று உத்தரவிட்டார். #MKStalin
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடைந்தது. இதையடுத்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் கடந்த 3.9.2018 அன்று முக்கொம்பு கொள்ளிடம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் அலட்சியத்தால்தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது. எனவே அணை உடைப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

    அணைகள் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அரசு அலட்சியம் காட்டுகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. அரசு வக்கீல் சம்பத்குமார், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் முதல்வரை அவதூறாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, திருச்சி கோர்ட்டில் இன்று மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று வழக்கில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் ஓம்பிரகாஷ், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதன் காரணமாக ஆஜராக முடியவில்லை என்றும், வழக்கு விசாரணையை சென்னை கோர்ட்டில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு அரசு வக்கீல் சம்பத்குமார் ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, வருகிற 8.3.2019 அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், திருச்சி கோர்ட்டில் ஆஜரான பிறகு சென்னை கோர்ட்டுக்கு வழக்கு விசாரணையை மாற்றுவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

    முதல்வரை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #MKStalin
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் தேமுதிக நிர்வாகி இன்று ஆஜரானார். #Jayalalithaa #ADMK #DMDK
    திருச்சி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே. மு.தி.க. கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சியானது.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விதிமுறைகளை மீறியதாக அப்போதைய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான திருவெறும்பூர் செந்தில்குமார், பார்த்தீபன், சந்திரகுமார் உள்பட 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அதனை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவெறும்பூரில் 30.3.2013 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்போதைய தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளராக இருந்த ஏ.ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக இளங்கோவன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.இளங்கோவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ஏ.ஆர்.இளங்கோவன் தற்போது சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். கோர்ட்டில் ஆஜராக வந்த அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால், சரவணன், பெருமாள், பகுதி செயலாளர் நூர்முகமது உள்பட பலர் உடன் வந்தனர். #Jayalalithaa #ADMK #DMDK
    திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு, முதல்வர் குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் செப்.24ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DMK #MKStalin
    திருச்சி:

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 21.6.2018 அன்று தி.மு.க. சார்பில் மாநில அளவிலான சிறுபான்மைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அப்போதைய தி.மு.க. செயல் தலைவரும், தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


    அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு பற்றியும், முதல்-அமைச்சர் குறித்தும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக திருச்சி அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் கடந்த 11.7.2018 அன்று தமிழக அரசு குறித்தும், முதல்-அமைச்சர் பற்றியும் அவதூறான தகவல்களை கூறிய மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்னிலையில் நடந்து வந்தது. இன்று மு.க.ஸ்டாலின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந் தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து தி.மு.க. வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர் ஆகியோர் ஆஜராகி கோர்ட்டில் மனு ஒன்றை அளித்தனர். அதில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இன்றைய விசாரணைக்கு மு.க.ஸ்டாலினால் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சம்பத் குமார் ஆஜரானார். #DMK #MKStalin
    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது விதிமீறிய வழக்கில் கே.என்.நேரு, 3 எம்எல்ஏக்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜராகினர்.

    திருச்சி:

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், கணேசன் உள்ளிட்டவர்கள் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    அப்போது அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கே.என்.நேரு உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி விசாரணை நடைபெற்ற போது தி.மு.க.வினர் ஆஜராகவில்லை. இன்று மீண்டும் விசாரணை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்ட செலாளர் காடு வெட்டி தியாகராஜன், திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், அப்போதைய வேட்பாளர்கள் பழனியாண்டி, கணேசன் ஆகியோர் ஆஜராகினர்.

    அப்போது சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் வழக்கு தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்று கே. என்.நேரு உள்ளிட்டவர்களிடம் நீதிபதி கவுதமன் கேட்டார். அதற்கு அவர்கள் இதில் உண்மையில்லை என்று கூறினர்.

    இதை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை வருகிற 30.5.2018 அன்று நீதிபதி கவுதமன் ஒத்தி வைத்தார். இன்று கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் ஆஜராக வந்த போது அவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், வக்கீல்கள் பாஸ்கர், ஓம்.பிரகாஷ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், தர்மராஜ், இளங்கோவன், பாலமுருகன், முத்துசெல்வம், கிராப்பட்டி செல்வம், ராமதாஸ், வட்ட செயலாளர் நாகராஜ், மற்றும் பலர் உடன் வந்தனர். 

    ×