கோவையில் நகையை பறிக்க முயன்ற வாலிபரை விரட்டி சென்று பிடித்த இளம்பெண்
கவுண்டம்பாளையம்:
கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் வைலட் கார்டன் பகுதியில் வசிப்பவர் சத்தி. இவரது மனைவி பாரதி (31). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் இருந்து தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் பாரதியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றான். சுதாகரித்து கொண்ட பாரதி தனது இரு கைகளால் கழுத்தில் இருந்த செயினை இருக பற்றிக்கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டார்.
இதனால் பயந்து போன வாலிபர் நகையை பறிக்க முடியாமல் பாரதியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து ஓடினான். பாரதியும் அவனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் ஓட முடியாமல் அருகில் இருந்த புதருக்குள் சென்று பதுங்கிக்கொண்டான். உடனே பாரதி சத்தம் போட்டார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புதருக்குள் மறைந்து இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அருகில் இருந்து தென்னை மரத்தை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் சுரேஷ் (25) என்பது தெரிய வந்தது. கடந்த 3 வருடங்களாக கோவையில் தனியார் கூரியர் கம்பெனியில் டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் டிரைவராக பணிபுரிவது தெரியவந்தது.
பிடிபட்ட சுரேஷ் மீது வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதா ?என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
நகையை பறிக்கமுயன்ற திருடனை வீரத்துடன் துரத்தி சென்று பிடித்த பாரதியை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.