செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே டயரை மாற்றிய போது பஸ் அடியில் சிக்கி கிளீனர் பலி

Published On 2018-08-26 17:21 GMT   |   Update On 2018-08-26 17:21 GMT
ஆரல்வாய்மொழி அருகே டயரை கழற்றும் பணியில் ஈடுபட்ட போது ஜாக்கி விலகியதால் பஸ் கீழே சரிந்து கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாழமலை (வயது 52). இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்சில் வாழமலை கிளீனராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நேற்று காலை நாகர்கோவிலுக்கு வந்தது. பயணிகளை இங்கு இறக்கிவிட்ட பிறகு அந்த பஸ்சின் டயரை மாற்றுவதற்காக தோவாளை அருகே உள்ள விசுவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்புக்கு பஸ்சை கொண்டு சென்றனர்.

அந்த பஸ்சின் டயரை மாற்றுவதற்காக ஜாக்கிகள் மூலம் பஸ்சை தூக்கி டயரை கழற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது கிளீனர் வாழமலை பஸ்சின் அடிப்பகுதிக்கு சென்று ஜாக்கியை சரிசெய்தார். எதிர்பாராத விதமாக ஜாக்கி விலகியதால் பஸ் கீழே சரிந்தது. இதில் பஸ்சின் அடியில் சிக்கி வாழமலை நசுங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு டிரைவர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டனர்.

ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாழ மலை இறந்து விட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News