உலகம்

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Published On 2026-02-05 16:14 IST   |   Update On 2026-02-05 17:05:00 IST
  • இளைஞன் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • டிரம்ப் கொள்கைகள் மீது ரூத் கடும் அதிருப்தியில் இருந்தார்.

2024 நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வெற்றி பெற்றது.

தேர்தலுக்கு முன் டிரம்ப் மீது இரண்டு முறை கொலை முயற்சி நடந்தது. முதல் முயற்சி ஜூலை மாதம் பென்சில்வேனியா பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது நடந்தது.

தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 19 வயது இளைஞர் டிரம்ப்-ஐ நோக்கி சுட்டார். குண்டு டிரம்ப்பின் காதை உரசி சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதன்பின் செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள தனக்கு சொத்தான மைதானத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது 2வது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதிலும் குண்டு டிரம்ப் மீது படவில்லை. தூரத்தில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ரியான் வெஸ்லி ரூத் என்ற நபரை போலீசார் துரத்திச் சென்று கைது செய்தனர்.

கொலை முயற்சி, துப்பாக்கிச் சட்ட மீறல் மற்றும் அரசு அதிகாரிகளைத் தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உக்ரைன் போர் மற்றும் டிரம்ப் வெளியுறவுக் கொள்கைகள் மீது ரூத் கடும் அதிருப்தியில் இருந்ததும், அதன் காரணமாகவே இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐலீன் கேனன், குற்றவாளியின் செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டு, அவருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உத்தரவிட்டார். 

Tags:    

Similar News