செய்திகள்

மதுரையில் இன்று மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை

Published On 2018-08-24 06:19 GMT   |   Update On 2018-08-24 06:19 GMT
சென்னையில் 5-ந்தேதி நடைபெற உள்ள அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். #MKAzhagiri #Karunanidhi
மதுரை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்டு முன்னாள் மத்திய மந்திரியும், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி திடீர் போர்க்கொடி தூக்கி வருகிறார். கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தந்தை கூறும் போது எனது மனக்குமுறல்களை வெளியிடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 5-ந் தேதி சென்னை திருவல்லிக் கேணியில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி செல்கிறார். இதில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடம் மு.க. அழகிரி ஆதரவு திரட்டி வருகிறார்.


மேலும் தி.மு.க.வில் உள்ள மு.க. ஸ்டாலின் அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.

அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மு.க. அழகிரி மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு அனைவரும் திரண்டு வரவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரவேண்டும், மேலும் கருணாநிதி உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி வரவேண்டும். அமைதி பேரணி மிக அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

பின்னர் நிர்வாகிகளிடம் ஒவ்வொருவரும் எத்தனை பேரை அமைதி பேரணிக்கு அழைத்து வருகிறீர்கள் என்ற விவரங்களை மு.க. அழகிரி கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனையில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் சின்னான், முபாரக் மந்திரி, உதயகுமார், கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

அமைதி பேரணி நடந்து முடிந்ததும் அடுத்த கட்டமாக முக்கிய நடவடிக்கையிலும் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

மு.க.அழகிரி தனது வீட்டு முன்பு போடப்பட்ட பந்தலில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது ‘‘அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞரின் வாரிசே வாழ்க’’ என்று தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #MKAzhagiri #Karunanidhi #MKStalin #DMK
Tags:    

Similar News