செய்திகள்
கருங்கல் அருகே போலீஸ் ஏட்டின் கார் தீ வைத்து எரிப்பு
கருங்கல் அருகே நள்ளிரவில் போலீஸ் ஏட்டின் காருக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவு அவர் தனது காரை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். மேலும் பிளாஸ்டிக் கவரால் அந்த காரை மூடி இருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸ் ஏட்டு வாசு தேவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ அந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
உடனே பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. இது பற்றி வாசுதேவனின் மகன் தீபன்ரஞ்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் எரிந்தது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.