செய்திகள்

பேராவூரணியில் 3 கடைகளில் ரூ.11 லட்சம் கொள்ளையடித்த முகமுடி கொள்ளையர்கள்- தனிப்படை போலீசார் விசாரணை

Published On 2018-08-23 12:02 GMT   |   Update On 2018-08-23 12:02 GMT
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 3 கடைகளில் ரூ.11 லட்சம் கொள்ளையடித்த முகமுடி கொள்ளையர்கள் கேமிரா காட்சி மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் முகமது இக்பால் (வயது 55).

இவர் கடந்த 21-ந்தேதி இரவு கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர். மேலும் அருகில் உள்ள ஹசியார், பக்ரீதின் ஆகியோர் நடத்தி வரும் 2 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ஹசியார் கடையில் ரூ.20 ஆயிரத்தையும், பக்ருதீன் கடையில் ரூ.3 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடி விட்டு கடையை திறக்க வந்த முகமது இக்பால் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல் 2 மளிகை கடைகாரர்களும் தங்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வியாபாரிகளும் பேராவூரணி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைத போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்க்ள யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொள்ளை நடந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து மர்ம நபர் கொள்ளையடிப்பது பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, பேராவூரணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், நகர மாணவர் அணி செயலாளர் கோவி. இளங்கோ ஆகியோர் கொள்ளை நடந்த கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் கொள்ளை நடந்தது பற்றி கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News