செய்திகள்

ஆரோவில் போலீஸ் நிலையம் எதிரே எச்சரிக்கை இல்லாத வேகத்தடையால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2018-08-23 10:21 GMT   |   Update On 2018-08-23 10:21 GMT
ஆரோவில் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான புதுவை-மயிலம் திண்டிவனம் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலையம் உள்ளது.

இந்த போலீஸ் நிலையத்துக்கு அதிகப்படியான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால் எப்போதுமே இங்கு மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் இங்கு வாகனங்களும் அடிக்கடி வந்து செல்லும்.

எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கு பெரிய உயரத்திலான வேகத்தடை அமைக்கப்பட்டது.

ஆனால் வேகத்தடையில் இரவில் மிளிரும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காதததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வேகத்தடை இருப்பதை காட்டும் எச்சரிக்கை வரை படத்துடன் கூடிய வாசகமும் இல்லை.

எனவே மாநில நெடுஞ்சாலைதுறையினர் வேகத்தடை அமைந்துள்ள இடத்தில் இரவில் ஒளிரும் பெயிண்ட் அடித்து எச்சரிக்கை வாசகம் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News